ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
எம்.ஜி.ஆர். வேடம் போடும் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை

எம்.ஜி.ஆர். வேடம் போடும் அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை

செங்கல்பட்டு நகரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (60). அ.தி.மு.க. பிரமுகரான இவர் எம்.ஜி.ஆர். போன்று வேடம் போட்டு கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இவரது மனைவி ஊஷா ராணி (53). மூர்த்தி அச்சக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.

சில தினங்களாக மூர்த்தி வீடு பூட்டிக் கிடந்தது. கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்றிருப்பார்கள் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் பொலிஸில் புகார் செய்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மூர்த்தியும், அவரது மனைவி உஷாராணியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இருவரும் தூக்கில் தொங்கி சில நாட்கள் ஆகி இருந்ததால் உடல்கள் அழுகத் தொடங்கிவிட்டன. அவற்றில் இருந்து துர்வாடை வீசியது தெரியவந்தது.

இருவரின் உடல்களும் பரிசோதனைக்காக செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா. கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கினார்களா. அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து செங்கல்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]