ஒரு முறை
சிவாஜி கணேசனின் படம் ஒன்றிற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பதாக இருந்தது. ஒரு
டூயட் பாடல் மலேசியா, சிங்கப்பூர் போய் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.
மலேசியாவில் குறிப்பாக மே மாதத்தில் படமாக்க வேண்டும் என்பது இயக்குனரின் திட்டமாக
இருந்தது.
காரணம் மலேசியாவின் பிரபல மலர் கண்காட்சி அப்போதுதான் தொடங்கும். அதற்கான அவசரத்தில்
படப்பிடிப்புக் குழுவினர் இருந்தனர்.
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் தயாராக
இருந்தன.
சிவாஜி, மஞ்சுளா கால்iட்டுகளும் ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட
போதும் கண்ணதாசன் எழுதி கொடுக்கவில்லை ‘அப்புறம் தருகிறேன்’ என்பதே அவரது பதிலாக
இருந்திருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல்
வரிகளாக எழுத இயலவில்லையாம்.
எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷ¥ட்டிங் இருக்கிறது, பாடலை
விரைவில் கொடுங்கள் என்றார்.
மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம்
பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா?
இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.
பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு
சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.
அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப்
பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56
தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார்.