ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
சனல் 4 தொலைக்காட்சியின் மற்றுமொரு வியாபார யுக்தி

சந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன்:

சனல் 4 தொலைக்காட்சியின் மற்றுமொரு வியாபார யுக்தி

இலங்கையில் சமாதானம் நிலைபெற்று நான்கு ஆண்டு களை அண்மித்துள்ள நிலையில் மக்கள் அச்சம், பீதியின்றி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இத் தறுவாயில் நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு துரித முன்னேற்றம் அடைந்து வருவதை கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுமானால் நமக்கு பாரிய அச் சுறுத்தலாகவும் இதுவரைகாலமும் தாம் அனுபவித்து வந்த சுகபோகத்தையும் வருமானத்தையும் முற்றாக இழக்க நேரிடும் என்ற பீதியில் ஒரு சில இனத் துரோக சக்திகள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் இலங்கையில் ஒரு கிளர்ச்சியை ஏற் படுத்தி அதில் தொடர்ந்தும் குளிர்காய முனைந்து வருகின்றன. இதில் ஓர் அங்கமே, சில அரச சார்பற்ற நிறுவ னங்களையும் சமாதானத்திற்கு எதிரா னவர்களையும் ஒன்று திரட்டி இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் இவ்வாறான திரிவுபடுத்தப்பட்ட பொய்ப் பிரசாரங்களாகும்.

இதன் ஓர் அங்கமாகவே, போலியான உண்மைக்குப் புறம்பான நிகழ்வுகளை உண்மையிலே இடம்பெற்ற நிகழ் வுகளைப் போன்று தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளாகவும் ஆவண ப்படங்களாகவும் தயாரித்து காட்டுவது அந்தவகையில் உலகில் பிரபல்யம் பெற்று விளங்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய வியாபார யுக்தியே பாலச்சந்திரனின் புகைப்படங்களாகும். இது பதுங்கு குழியொன்றில் உயிரோடு வைக் கப்பட்டிருந்த காட்சியையும், நிலத்தில் இறந்து கிடப்பதாகவும் சித்திரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய இப்புகைப் படங்களை வெளியிட்டதன் மூலம் உலக அரங்கில் இலங்கையைத் தனிப்படுத்தி சமாதானத்தை சீர்குலைத்து தமது முதலாளிகளின் 'இருப்பை' உறுதிப்படுத்த முனைந்துள்ளது.

இதுவரை காலமும் புலிகள் மேற்கொண்ட இன அழிப்புக்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறிதளவேனும் சிந்தித்து வேதனைப்படாத இத்துரோக சக்திகள் ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் போலி ஆவணங்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச் மாதம் நெருங்கும் போது வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பி இலட்சக்கணக்கான டொலர் நோட்டுகளை அபகரிக்கும் கொடிய இனத்துரோக சக்திகள் அசுர வேகத்தில் செயற்பட ஆரம்பிக்கின்றன.

இந்தியாவில் பிரபல்யமான இந்து பத்திரிகை கூட பாலச்சந்திரனின் புகைப்படங்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் முண்டி யடித்துக் கொண்டு பிரசுரித்திருப்பது கவலைக்குரிய விடயமே. சனல் 4 தொலைக்காட்சி சேவை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் அனுசர ணையுடனான பிரேரணையை வெற்றி கொள்ளச் செய்து இலங்கையில் இனங்களுக்கிடையில் உருவாகியிருக்கும் சமாதானப் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் சீர் குலைத்து அதன் மூலம் இலாபம் காண முனைந் திருக்கின்றது.

இதற்கு முன்னரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஜெனீவா மாநாடு நடைபெறும் போது இப்படியான போலி கட்டுக்கதைகளை எல். ரி. ரி. ஈ.யை ஆதரிக்கும் இயக்கங்களும் அரச சார்பற்ற சில இனத் துரோக சக்திகளும் பரப்பி வருவதை வழமையாக கொண்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில்தான் சனல் 4 இந்தக் காட்சியை வெளியிட்டி ருக்கின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற் போதுதான் எம் மக்கள் சுபீட்சத்தைக்காண ஆரம்பித்திருக்கின்றனர். சிறப்பானதோர் எதிர்காலத்தை நோக்கிய தம் பயணத்தை ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் இப்புகைப்படங்களை சனல் 4 என்ன நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளது என்பதை எவருமே இலகுவில் புரிந்துகொள்வர்.

சனல் 4 வெளியிட்டுள்ள சிறுவனைப் புலிகளே படுகொலை செய்து அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது போட முயற்சி செய்துள்ளதுடன் இதனூடாக அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் அவர்கள் எண்ணியுள்ளனர். ஆனால் எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே குழந்தைகளைப் படுகொலை செய்ததே கிடையாது. பொறுப்பு வாய்ந்த ஒரு அரசுக்கு அப்படியான தேவையும் ஏற்படாது.

இலங்கை அரசாங்கம் எச்சந்தர்ப் பத்திலும் சிறுவர்களை ஆயுதமேந்தி யுத்தக் களத்துக்கு அனுப்பவில்லை. மாறாக புலிகள் 8, 10 வயதுடைய சிறுவர்களை பலவந்தமாகப் பிடித்து ஆயுதப் பயிற்சி அளித்து யுத்தத்தில் ஈடுபடுத்தினர். அவர்களே குழந்தைகளை குரூரமாக கொலை செய்தனர். ஆனால் அரசாங்கம் 21 வயதுக்கு மேற் பட்டவர்களையே ஆயுதப் படைக்கு ஒழுங்கு முறையாக சேர்த்துப் பயிற்சி அளித்து நடவடிக்கைகளில் ஈடுப டுத்துகின்றது.

இராணுவம் எக்காரணம் கொண்டு மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை சுட்டுக்கு விக்கவில்லை. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகளே தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார்கள். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் எல். ரி. ரி. ஈ.யினரின் பிடியில் இருந்து இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங் கரவாதிகளே சுட்டுக்கொல்வதை முழு உலகமும் கண்கூடாகக் கண்டது.

ஒரு நல்ல நற்பண்புகளையும் உடைய ஒருவனுக்கு எதிராக போலி வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து சுமத்தி வருவதால் உண்மையறியாத மக்கள் அவனின் மேல் அவநம்பிக்கை கொள்வார்கள் என்ற ஹிட்லரின் கொள்கையையே இந்த இனவிரோத சக்திகளும் பின்பற்று கின்றனர்.

இன விரோத சக்திகளின் போலி பிரசாரங்களுக்கு ஏமாந்த பல நாடுகள் அவர்களின் துஷ்ட குணங்கள் தெரிந்தோ தெரியாமலோ உடந்தை போகின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை இலங்கை அரச படையினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டும் சனல் 4 தொலைக்காட்சி சேவையானது, யுத்தத்தின் போது புலிகள் பல இலட்சக் கணக்கான அப்பாவிச் சிறுவர்களையம் பொது மக்களையும் கொடூரமாக கொலை செய்தமையை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை?

சாதாரண பொது மக்களின் பிள் ளைகளை ஏன் இவர்கள் கண்டு கொள்வதில்லை? இவர்களை வைத்து படம் எடுத்தால் அவற்றை அதிக விலைக்கு விற்கமுடியாது என்பதற் காகவா? அவர்களது பெற்றோருக்கு தமது பிள்ளைகள் குறித்து கனவுகாண தகுதி இல்லை என்பதற்காகவா? இல்லை சிறுவர்கள் முதியவர்கள் எனப் பார்க்காமல் புலிகள் தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்ததை மக்கள் மனதில் இருந்து இவர்கள் அழித்துவிட முயற்சிக்கின்றார்களா?

அவ்வாறே புலிகள் இயக்க உறுப்பினர்களது குடும்பத்தவர்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்றால் கடற்புலித் தலைவர் சூசை யினதும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகளை ஏன் பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்துவந்து பாதுகாக்க வேண்டும்?

தமிழ் மக்களை மனித கேடயங்க ளாக பயன்படுத்தி, தனிநாடு, தனியாட்சி கோரிக்கைகளை முன்வைத்து இல ங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த புலிகள் அமைப்பினர் இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. இவர்களது செயற்பாடுகளால் பல் லாயிரக் கணக்கானோரின் உயிர் காவுகொள்ளப்பட்டதுடன், பல கோடி சொத்துக்களுக்கும் அழிவு ஏற்பட் டது. ஆனால் பொறுப்பு மிக்க அரசானது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கக்கூடிய வகையில் வினைத்திறன் மிக்கதுமான புனர்வாழ்வுத் திட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டு முன்னெடுத்ததில் வெற்றியும் கண்டுள்ளது.

இலங்கையில் நிலவிய பயங்கர வாதம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலர் நஷ்டவாளிக ளாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் புலிகளுடன் சட்டவிரோதமாக வியாபாரம் செய்துகொண்டிருந் தவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டு நடத் துபவர்களுக்கும் புலிகள் இல்லா தொழிக்கப்பட்டமை அவர்களை வீதிக்கிறக்கியது போலாயிற்று. போதைப் பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான பண த்தை இவர்கள் சம்பாதித்து சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வந்த னர்.

புலிகளின் தூதுவர்கள் மில்லியன் கணக்கான டொலர்களை நாளாந்தமும், மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் புலம்பெயர் மக்கள் மூலம் திரட்டி வந்தனர். இம் மக்களில் சிலர் தமது சொந்தப் பணத்தை விருப்பத்திலும் மற்றும் சிலர் வலுக்கட்டாயத்தின் பெயரிலும் செலுத்தி வந்தனர். இதைத் தவிர பயங்கரவாதிகளுக்கு மேலும் பல வழிகள் வருமானம் திரட்டுவதற்கு இருந்து வருகின்றது. இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமானங்களை பயன்படுத்தி இப் பயங்கரவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு நாடடின் இறையாண்மையை முற்றாக சீர்குலைத்தனர்.

பயங்கரவாதிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் ஆதரவு சக்திகள் நஷ்டவாளிகளாகி தமது இலாபத்தை முற்றாக இழந்தனர்.

இருப்பினும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டுத் தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய் ஆட்சேர்ப்பு, உயிரிழப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுதந்திரம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தின் மூலம் வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு இப்போது பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

சத்தியம் என்றும் நிலைத்திருக்கும் உண்மையை போலிக் கட்டுக்கதைகள் மூலம் மறைத்துவிட முடியாது. இது ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் நிரூபிக்கப்படும். இதன் மூலம் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் எங்கள் நாடு வெற்றிபெறும். இது உலக நாடுகளின் பாராட்டை எமக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]