சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
ரiத் லத்தீப் (பாகிஸ்தான் முன்னாள் தலைவர்): ஒரு பாகிஸ்தான் வீரர் என்ற முறையில்
இந்த தீர்ப்பை எனது வாழ்க்கையில் மோசமானதாக கருதுகிறேன். ஆனால் இந்த தண்டனை
அவர்களுக்கு சரியானதுதான். இப்போது பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் கிரிக்கெட்
சபையும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில்
மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில்,
கிரிக்கெட்டில் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது.
இம்ரான் கான் (பாகிஸ்தான் முன்னாள் தலைவர்): இன்று பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு
அவமானகரமான நாள். இந்த வழக்கில் சிக்கிய முகமது ஆமீருக்காக மிகவும் வருந்துகிறேன்.
ஏனெனில், அவர் மிகவும் இளம் வீரர்.
பாப் வில்லிஸ் (இங்கிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர்):
இந்த தீர்ப்பு, மேட்ச் பிக்சிங் போன்ற சூதாட்டங்களை இங்கிலாந்தில் இருந்து
ஒழித்துக்கட்ட நிச்சயம் உதவும். ஆனால் மற்ற நாடுகளைப் பொறுத்தவரை நான் எதையும்
உறுதியாக சொல்ல முடியாது.
மொயின் கான் (பாகிஸ்தான் முன்னாள் தலைவர்):
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள். ஆனால் இது பாகிஸ்தான்
கிரிக்கெட்டுக்கு புதிய தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். இன்திகாப் ஆலம்
(பாகிஸ்தான் அணியின் முன்னாள் முகாமையாளர்) பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இன்று
கறுப்பு தினம். இந்த வீரர்களுக்காக வருந்துகிறேன். ஆனால் அவர்கள் செய்த
தவறுகளுக்குரிய பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஜாகீர் அப்பாஸ் (பாகிஸ்தான்
முன்னாள் தலைவர்):
இந்த வழக்கால், நான் உட்பட அனைத்து பாகிஸ்தான் மக்களும் சந்தித்துள்ள தர்மசங்கடமான
நாள். இது ஒரு கறுப்பு தினம். ‘ஸ்பொட் பிக்சிங்’ குற்றச்சாட்டுக்காக கிரிக்கெட்
வீரர்கள் சிறைக்குப் போவார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.