தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டது, நீதி தவறான பாதையில் செல்வதை
காட்டுகிறது,” என, அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
“2ஜி” ஸ்பெக்டரம் ஊழலில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும்
ஏழு பேருக்கு எதிராக, சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து
அவர்கள் பிணை கோரி டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டன.
இது தொடர்பாக, ஸ்பெக்டரம் வழக்கில், கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்
ஜெத்மலானி கூறியதாவது சரியான காரணம் இல்லாமல், கனிமொழியின் பிணை மனுவை நீதிபதி ஷைனி
நிராகரித்தது, நீதி தவறான பாதையில் செல்வதை காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள்
உயர் நீதிமன்றம் போய் நிவாரணம் பெறட்டும் என்ற எண்ணத்தில், கனிமொழி மற்றும் பிறரின்
பிணை மனுக்களை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்துள்ளார். இது மோசமான நடைமுறை.
வேண்டுமென்றே சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றது. இப்பிரச்சினைக்கு விரைவில்
உயர் நீதிமன்றம் சரியான தீர்வு காணும் என நம்புகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் ஓடி
விடுவார் என்றால், ஆதாரங்களை மாற்றி அமைக்க முற்படுவார் என்றால் பிணை வழங்க
மறுக்கலாம். ஆனால் கனிமொழியைப் பொறுத்த மட்டில், அதற்கான ஆதாரங்கள் எதுவும்
வழக்கில் இல்லை. இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார்.