மும்பையில் தனது சொந்த வீட்டில் குடியேறினார் சச்சின். 5 மாடிகள் கொண்ட இந்த சொகுசு
மாளிகையில் விநாயகர் கோயில், நீச்சல் குளம், “மினி- தியேட்டர்” உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின். இவர், விளையாட்டு
வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.
கடந்த 2007ல் ரூ. 39
கோடிக்கு மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பழைய
மாளிகை ஒன்றை வாங்கினார். 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த விசாலமான இடத்தில்,
ரூ. 50 கோடி செலவில் புதிய வீடு கட்டினார். பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்,
நேற்று முன்தினம் முறைப்படி குடியேறினார்.
இது குறித்து சச்சின் கூறுகையில், “சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின்
கனவாக இருக்கும். இந்தக் கனவும் எனக்கும் இருந்தது. இதனை நனவாக்க முடிந்ததில்
மிகவும் மகிழ்ச்சி. முன்பு வசித்த வீடு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில்
கிடைத்தது. தற்போது காலி செய்து விட்டேன். இதன் மூலம் வேறு ஒரு வீரர் இங்கு தங்க
முடியும்.
இங்கிலாந்து தொடருக்கு முன் புது வீட்டுக்கான ‘கிரஹ சாந்தி’, “வாஸ்து பூஜா’
போன்றவற்றை கடந்த ஜூன் 11ம் திகதி செய்தோம் என்றார்.