ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
கடல்கள், ஆறுகள் பற்றி அல்குர்ஆன்...

கடல்கள், ஆறுகள் பற்றி அல்குர்ஆன்...

திருக்குர்ஆன் இறைவேதமே!

,ரு கடல்கள் சந்திக்கும் இடங்களில் இடையே ஒரு தடுப்பு இருப்பதை நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. இத்தடுப்பு அவ்விரு கடல்களையும் பல்வகைகளில் வேறுபடுத்துகின்றது. உஷ்ண அளவு, உப்புத்தன்மை, அடர்த்தி என்பன ஒவ்வொரு கடலுக்கும்தனித்தனியே உண்டு.

உதாரணமாக அத்திலாந்திக் கடல் நீருடன் ஒப்பிடும் போது மத்திய தரைக் கடல் நீர் சூடானது. உப்புத்தன்மை கொண்டது, குறைந்த அடர்த்தியுடையது. ஜிப்ரால்டர் ஜல சந்தியில் மத்திய தரைக் கடல் நீர் அத்திலாந்திக் கடலுக்குள் நுழையுமிடத்தில் 1000 மீட்டர்களுக்குக் கீழ் அது பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு செல்கிறது.

இது அதன் வெப்பம், உப்பு, அடர்த்தி முதலிய குணங்களைக் கொண்டு அறியப்பட்டுள்ளது. அவ்வளவு ஆழத்தில் அது நிலை கொண்டுள்ளது. பெரும் அலைகளும் உறுதியான நீரோட்டங்களும் கடல் நீரேற்றம் வற்றுதல் போன்றவை இருந்தும் அவ்விரு கடல் நீரும் கலப்பதுமில்லை. தம் தடையை மீறுவதுமில்லை.

அல்குர்ஆனும் இது தொடர்பாகப் பின்வருமாறு கூறுகிறது.

“இரு கடல்களை அவை இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்க அவனே விட்டுவிட்டான். (ஆயினும்) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அதனை) அவ்விரண்டும் மீறிவிடாது”. (அல்குர்ஆன் 55:19, 20)

ஆனால் நன்னீருக்கும் கடல் நீருக்கும் இடையிலுள்ள தடுப்பைப் பற்றிப் பேசும்போது அல்குர்ஆன், இத்தடுப்புடன் “தடை செய்யப்பட்ட ஒரு தடுப்புச் சுவர்” பற்றியும் குறிப்பிடுகிறது.

“இன்னும் அவன் எத்தகையவனென்றால் இரு கடல்களையும் அவன் ஒன்று சேர்த்திருக்கின்றான். ஒன்று மிக்க மதுரமானது, தாகம் தீர்க்கக் கூடியது. மற்றையது உப்புக்கரிப்பானது, கசப்பானது, இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் அவன் ஆக்கியிருக்கின்றான்” (அல்குர்ஆன் 25:53)

உப்புத்தன்மையுடைய இரு கடல் நீர்கள் பற்றிக் குறிப்பிடும்போது, அல்லாஹ், தடுப்பைப்பற்றி மாத்திரம் குறிப்பிட்டு விட்டு, நன்னீரும் கடல் நீரும் கலக்கும் போது தடுப்பையும் திரையையும் பற்றிக் குறிப்பிடுவதன் காரணமென்ன?

நதி முகத்துவாரத்தில் (கடலுடன் கலக்குமிடத்தில்) நன்னீரையும், உவர் நீரையும் பிரித்தறிவிக்கும் Pycnoline Zone எனும் பகுதி அடர்த்தியில் மாறுபட்ட ஒரு தடுப்புச் சுவர்போல் காணப்படுகிறது. உவர்த்தன்மையிலும், நன்னீரையும், கடல் நீரையும் விட மாறான கலவையை இது கொண்டுள்ளது.

நீரின் உஷ்ணத்தை அறிதல், உவர்த்தன்மை, அடர்த்தி, பிராணவாயு (ஒக்ஸிஜன்) கரையாத தன்மை (Dissolubility)  போன்றவற்றை அளவீடு செய்யும் நவீன கருவிகளைக் கொண்டு இத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு கடல்கள் கலப்பதை மனித புறக்கண்களால் காண முடியாது. அவை ஒன்றாகவே தோற்றமளிக்கின்றன. அது போன்றே முகத்துவாரங்களில் நீர் மூன்று வகைகளாக நன்னீர் உவர் நீர் தடுப்பு இருப்பதையும் நம்மால் காணமுடிவதில்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]