ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
இதை தொட்டால் பக்கவாதம்!

இதை தொட்டால் பக்கவாதம்!

தொட்டவுடன் பக்கவாதத்தை ஏற்படுத்தி நம்மை நிலை குலைய செய்கின்றன கல்மீன்கள். எண்ணற்ற உயிரினங்கள், எல்லாம் கடல் தாயின் பிள்ளைகள். இவை மனிதனை அணைக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். மறைவாக வாழ்க்கை நடத்தும் மீன்கள் பெற்றிருக்கும் தற்காப்பு கள் ஏராளம். ‘சைனேன் சியா வெருகோசா’ எனப்படும் ஒரு வகை மீன், தமிழகத்தில் ‘கல்’ மீன் என்று அழைக்கப்படுகிறது. இவை இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த மீன்கள் கடலினுள் கற்களிடையே தான் வசிக்கின்றன. அதற்கேற்ப நிறத்தையும் மாற்றிக் கொள்ளும். இது ‘மீன்தானா’ என்று ஆச்சரியப்படும் வகையில் கல்போன்றே தோற்றமளிக்கும். இதன் தோல் அதிக நச்சு தன்மை கொண்டது. உடலில் கத்தி போன்றிருக்கும். முட்களை ஒட்டியிருக்கும் பைகளிலும் நச்சுப் பொருள் உள்ளது. தெரியாமல் இதை தொட்டால் போதும், உடனே முட்களால் தீண்டியவரை தாக்கி விடும். நச்சு சுரப்பியோடு மீனின் முட்கள் இணைந்திருப்பதால், தீண்டப்பட்ட இடத்தினுள் நஞ்சு நுழைந்துவிடும். தாக்கப்பட்டவர்கள் பக்கவாதம் வந்தது போல் முடக்கப்பட்டு விடுவர். இந்த நஞ்சு அதிகரிக்கும்போது மரணம் நிச்சயம்.

கடலடியில் செல்வோர் இம்மீனின் முள்ளை தொட்டாலோ, மிதித்தாலோ அவர்கள் ஆபத்தை சந்திக்கும் நிலை உள் ளது. இந்த விஷத்தன்மை, ஆண்டவன் அதற்கு அளித்த தற்காப்பு சாதனம்.

மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய தலைகீழ் வானவில்

வான் பகுதியில் மனதை மயக்கும் வானவில் ஏற்படுவது உண்டு. இந்த வானவில் வழக்கமாக வளைந்து காணப்படும். இதில் காணப்படும் பல வண்ண நிறங்கள் நீல வானத்திற்கு அழகு சேர்க்கும். ஆனால் பிரித்தானிய வெலஸ் ஷயர் வான் பகுதியில் ஏற்பட்ட வானவில் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த வானவில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. மேகக் கூட்டப் பகுதியில் காணப்படு சிறு பனிவடிவங்களின் தாக்கத்தால் இந்த தலைகீழ் அதிசய வானவில் ஏற்பட்டு உள்ளது. மேகத்தில் இருந்து மழைத்துளிகள் பூமியை நோக்கி வரும்போது வழக்கமாக வானவில் ஏற்படும். ஆனால் மழை ஏதும் இல்லாமல் சூரியன் ‘பளிச்’ என சிரித்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் இந்த விசேடமான தலைகீழ் வானவில் தோன்றி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது.

இந்த தலைகீழ் வானவில் சில நிமிடங்களில் மறைந்துவிட்டது. மேகத்தில் பனி துகள்கள் வலது பகுதியில் அணி வகுத்து இருந்ததால் இதுபோன்ற வானவில் தோன்றி உள்ளது என ஆய்வு மைய நிபுணர்கள் தெரிவித்தனர்.

அந்நியப் பரிதிகளின் அண்டக் கோள்கள் (Extrasolar Planets)

1995 ஆண்டு வரை நமது பரிதி மண்டலத்துக்கு அப்பால் ஒரு புறவெளிப் பரிதி அண்டம் (Exoplanet)  கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு வானியல் நிபுணர் சுமார் 440 புறவெளிப்பரிதிக் கோள்களைக் கண்டு பிடித்துள்ளார். அந்த எண்ணிக்கை விரைவாக ஏறிக் கொண்டே போகிறது. பெரும்பான்மையான புறவெளிப பரிதிக் கோள்களை புவித்தளத் தொலைநோக்கிகள் கண்டுபிடித்துள்ளன. ஹப்பிள் தொலைநோக்கி, பிரிட்ஸர் தொலைநோக்கி, கெப்ளர் தொலைநோக்கி ஆகிய மூன்றும் புறவெளிக் கோள்கள் கண்டுபிடிப்பில் பங்கெடுத்துள்ளன. புவிநோக்குக் கோட்டில் நகரும் 70 கோள்களை (Transiting Planets  ஹப்பிள் தொலைநோக்கி கண்டுள்ளது. சமீபத்தில் ஹப்பிள் இரண்டு புறவெளிப் பரிதிக் கோள்களையும் அவற்றின் சூழ்வெளி வாயுக்களையும் (சோடியம், ஒட்சிசன், கார்பன், ஐதரசன், காபனீரொட்சைட், நீர்மை, மீதேன) நோக்கியுள்ளது. நமது பால்வீதி கோள் மண்லத்தில் 180,000 விண்மீன்களை ஆராய்ந்து 16 புறப்பரிதிக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி