ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE,21, 2011

Print

 
இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களால் மடகஸ்காரில் கண்காட்சி

இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களால் மடகஸ்காரில் கண்காட்சி

அண்மைக் காலத்தில் இரத்தினக் கற்களுக்கு பிரசித்தி பெற்ற ஒரு நாடாக மடகாஸ்கர் தீவு விளங்குகின்றது. இந்நாடு ஆபிரிக்கக் கண்டத்தை அடுத்துள்ள தீவாகும். இத் தீவு உலகில் பிரசித்தி பெற்ற ஒரு இரண்டாவது தீவாகும். இத் தீவில் 2 மில்லியன்கள் கொண்ட சனத்தொகையே உள்ளனர். இத் தீவு சுற்றுலாத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

இங்கு பல நாடுகளைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர்களும் சென்று இவ் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். இலங்கையிலிருந்தும் கடந்த இரு தசாப்தங்களாக அநேகமான இரத்தினக்கல் வியாபாரிகள் அங்கு சென்று இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது இலங்கையிலிருந்து செல்பவர்கள் அந்நாட்டின் இரத்தினக்கல் வர்த்தகத்தில் மாத்திரமின்றி இரத்தினக்கல் அகழ்விலும் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அங்குள்ள காணிச் சொந்தக் காரர்களுடன் இணைந்து இரத்தினக்கல் அகழ்தல், பட்டை தீட்டுதல் வடிவமைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவி வருகின்றனர்.

அத்துடன் இலங்கையில் இருந்து மடகாஸ்கர் சென்று இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஊடாக பெருந்தொகையான அந்நியச் செலவாணிகளையும் இலங்கை பெற்றுக் கொள்கின்றது.

இலங்கையிலிருந்து மடகாஸ்கர் சென்று இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கட்நத மே மாதம் அந்நாட்டில் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வர்த்தகம் சம்பந்தமான ஒரு கண்காட்சியையஒழுங்கு செய்திருந்தனர். அந் நாட்டின் ஜனாதிபதி அன்றி ரஜோலினா மற்றும் பிரதமர் அல்போ கமிவிடால் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இலங்கை மற்றும் மடகாஸ்கர் நாட்டு இரத்தினக்கல் பார்வையாளர்களுக்காக இக் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் நூற்றுக்கணக்கான இரத்தினக்கல் வர்த்தகர்கள் அங்கு சென்று பல மாதங்கள் தரித்து நின்று இந்த அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சில வேலைகளில் அங்கு பல்வேறு கஷ்டங்களையும் இலங்கை வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்றனர். இதற்காக 2009ம் ஆண்டில் நடைபெற்ற தற்போதைய ஜனாதிபதியின் தேர்தலுக்கு இலங்கை வர்த்தகர்கள் உதவியுள்ளனர்.

அதன் நிமித்தம் இலங்கை மாணிக்கக் கல் வர்த்தகர்கள் நடாத்திய கண்காட்சிக்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரதம அதிதியாக வருகை தந்திருந்தார்.

இக் கண்காட்சிக்கு இரத்தினக்கல் வர்த்தகர்களான பலாங்கொடையைச் சேர்ந்த நஜீம், கொழும்பைச் சேர்ந்த யெஹியா, களுத்துறையைச் சேர்ந்த முக்தார் ஆகியோர் முன்னின்று ஒழுங்கு செய்திருந்தனர். அதன் ஆரம்ப நிகழ்வுக்கு சமுகமளித்திருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான தொடர்புகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

இதுபோன்ற கண்காட்சிகளை ஒவ்வொரு 6 மாத காலத்திற்கு நடாத்துமாறும் இலங்கை வர்த்தகர்களை வேண்டிக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களது நாட்டில் சுற்றுப் பிரயாணிகள் இக் கற்களை வாங்கவும் விற்கவும் சந்தர்ப்பம் ஏற்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக யெகியா எமது நிருபரிடம் தெரிவித்தார்.

எமது நாட்டு வர்த்தகர்கள் அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டு இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதன் மூலம் எமது நாட்டுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் எமது நிருபரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]