ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, OCTOBER, 04, 2010
நட்சத்திரங்களின் நிறம்
நட்சத்திரங்களின் நிறம்
எல்லா நட்சத்திரங்களுக்கும் நிறம் உண்டு. அந்தந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பில்
காணப்படும் வெப்பத்தைப் பொறுத்து நிறங்கள் மாறுபடுகின்றன. சில நட்சத்திரங்கள்
குளிர்ச்சியாக இருக்கும்.
அவற்றின் புற வெப்பம் 3 ஆயிரம் பாகை செல்சியஸாக இருக்கும். அந்த வெப்பநிலை கொண்ட
நட்சத்திரங்களின் நிறம் சிவப்பாக இருக்கும். மிகவும் சூடான நட்சத்திரங்களின் புற
வெப்பம் 10 ஆயிரம் பாகைக்கு மேலும் காணப்படும்.
அதுபோன்ற வெப்பமுள்ள நட்சத்திரங்கள்
நீல நிறத்தில் ஒளிரும். நாம் அன்றாடம் பார்க்கும் சூரியனும் ஒரு நட்சத்திரமே. இதன்
புற வெப்பம் 5 ஆயிரம் பாகை செல்சியஸ் ஆகும். சூரியனின் நிறம் மஞ்சள் கலந்த வெள்ளை
ஆகும். நட்சத்திரங்களின் நிறங்களை வெற்றுக் கண்களால் காண முடியாது. சக்தி வாய்ந்த
தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.
ஓதி மலை
சுவாமிமலையில் முருகப் பெருமான், தனது தந்தையான சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்னும்
பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்வதாக சொல்வார்கள். ஆனால் கோவை மாவட்டத்தில்
உள்ள மந்திரகிரி வேலாயுதசாமி கோவிலில் சிவபெருமான் குருவாக இருந்து, முருகப்
பெருமானுக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை உபதேசித் ததாக சொல்லப்படுகிறது.
இதுதவிர,
கோவைக்கு அருகே உள்ள ‘ஓதி’ மலையில்தான் முருகப் பெருமான் சிவபெருமானுக்கு ‘ஓம்’
என்னும் மந்திரத்தை ஓதினார் என்றும், அதனாலேயே இம்மலை ஓதிமலை என்று பெயர் பெற்றது
என்றும் கூறுகிறார்கள். இம்மலையில் கோவில் கொண்டுள்ள முருகப் பெருமான் ஐந்து முகம்
கொண்டவர்.
செயற்கைக் கோள்
செயற்கைக் கோளை ராக்கெட்டுகள் விண்வெளிக்குச் சுமந்து செல்கின்றன. ரஷ்யா தான் முதன்
முதலில் (1957) வான்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பியது. பூமியைச் சுற்றி உள்ள காற்று
மண்டலத்தை 4 பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.
பூமியிலிருந்து 50 கிலோ மீற்றருக்கு மேல் 400 கி.மீ. வரை உள்ள 4வது அடுக்கு
தமோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் செயற்கைக் கோள்கள் மிதந்து
வருகின்றன. இங்கு வெப்பமும், குளிரும் மிக அதிகமாக இருக்கும். இத்தகைய கடினமான
சூழலில்தான் செயற்கைக்கோள் செயற்படுகிறது.
நிலவு சுருங்குகிறது
எம்மைப் பெரிதும் கவர்ந்த பூமியின் துணைக் கோள் நிலா கவிஞர்கள் நிலவைப் புகழ்ந்த
அளவுக்கு வேறு எதையும் புகழ்ந்திருக்கமாட்டார்கள்.
தற்போது நிலவைப் பற்றி ஒரு புதிய தகவலைக் கூறியிருக்கிறார்கள் கோள்
ஆராய்ச்சியாளர்கள். அதாவது, நிலா சுருங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதற்கு
ஆதாரமாக நிலவுப் பரப்பில் காணப்படும் விரிசல்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஒரு கோளானது குளிரும்போதோ சுருங்கும்போதோ மட்டுமே அம்மாதிரியான விரிசல்கள் ஏற்படும்.
ஆனால் நிலா சுருங்குவது குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது மிக மிக மெதுவாகத்தான்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று ஆறுதலும் அளிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அவர்கள் தாங்கள் செய்துள்ள ஆய்வின்படி நிலவானது கொஞ்சம் கொஞ்சமாகக் காற்று இறங்கும்
பலூனைப் போல சுருங்குகிறது. அதன் உட்பகுதி குளிர்வதால் இந்தச் சுருக்கம் ஏற்படுகிறது
என்று தெரிவிக்கின்றனர். அந்தச் சுருக்கம் நிலவின் சுற்றளவை 100 மீட்டர் அளவுக்குக்
குறைத்திருக்கிறது என்று கூறுப் படுகிறது.
“நிலவின் உட்பகுதி குளிரும்போது அது சுருங்குகிறது. அப்போது அதன் நிறைக்கு ஏற்ப அதன்
வெளி அடுக்கும் மாற வேண்டியிருக்கிறது. அதனால்தான் வெளிப் பகுதியில் விரிசல்கள்
ஏற்படுகின்றன’ என்று ஸ்மித்சான்சியன் நிறுவன முன்னணி விஞ்ஞானி டாக்டர் தாமஸ்
வாட்டர்ஸ் தெரிவிக்கிறார்.
நிலவின் பீடப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அந்த விரிசல்களை, விண்வெளியில் இருந்து
அனுப்பப்பட்டிருக்கும் காட்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.
இம்மாதிரியான விரிசல்கள், அப்பல்லோ விண்கலம் 1970ம் ஆண்டில் எடுத்து அனுப்பிய
படங்கள் மூலம் முதன் முதலாக அறியப்பட்டன.
இப்படி நிலவு சுருங்குவதால் அது இல்லாமலே போய்விடப் போவதில்லை. பூமிக்கும் எவ்விதப்
பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் நிம்மதி அளிக்கின்றனர்.
யோகா
சோர்வுக்கு வேறு எந்த உடற் பயிற்சியையும் விட ‘யோகா’ நல்லது, அது அதிகப்
பலனளிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘யோகா’ வின் ஆக்கபூர்வமான தாக்கம்,
உற்சாகத்தைக் கூட்டுகிறது. மனக்கவலை, படபடப்பைப் போக்குகிறது என்கிறார்கள். நடைப்
பயிற்சியை விட ‘யோகா’ செய்வது நல்லது என்பது அவர்கள் கருத்து.
பொஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் மேற்கண்ட முடிவைத்
தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் யோகாவில் ஈடுபடுபவர்கள், நடைப்பயிற்சியில்
ஈடுபடுபவர்களின் மூளைச் செயற்பாட்டு நிலையை ஒப்பிட்டனர்.
அதற்கென்று ஒரு குழுவினர் வாரத்துக்கு மூன்று முறை ‘யோகா’ பயிற்சியில்
ஈடுபடுத்தப்பட்டனர். மற்றொரு குழுவினர் அதே காலகட்டத்தில் அதே கால அளவுக்கு
நடைப்பயிற்சி மேற்கொள்ளச் செய்யப்பட்டனர். யோகாவில் ஈடுபட்டவர்கள் மனநிலையில்
குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.