நிறைவின் ஆரம்பம் எங்கே?
ஒரு பெண் தாய்மையடைவது என்பது
மிக எளிதான வி'யமா?
‘இல்லை... இல்லை மிக கஷ்டமான விஷயம்’ என்கிறார்கள், குழந்தையின்மை சிகிச்சை
மையங்களில் வரிசை கட்டி வருத்தத்தோடு காத்திருக்கும் தம்பதிகள். எத்தனை சிகிச்சைகள்,
எத்தனை காத்திருப்புகள், எத்தனை அவஸ்தைகள்...! ஆனாலும் சிலருக்கு வாய்ப்பதேயில்லை
மகப்பேறு!
சிலர் தாமதத்தில் தாய்மையடைகிறார்கள். சிலர் கருமுட்டை தானம் பெற்று தாயாகிறார்கள்.
சிலர் வாடகைத் தாய் மூலம் அந்த வாய்ப்பினைப் பெறுகிறார்கள். இதில் எந்த முறை
என்றாலும் அதில் பெற்றோராகப் போகிறவர்களின் கருமுட்டை, கருப்பை, உயிரணு போன்ற ஏதாவது
ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும்.
இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் சிலர் தாய் - தந்தை ஆவதுண்டு. எப்படி?
சில நேரங்களில் பிறப்பு சூழ்நிலை அடியோடு மாறி, ஒரு ஆன்மா வேறு பெற்றோருக்கு
குழந்தையாகப் பிறந்து விடுகிறது. தான் திட்டமிட்டபடி தனது கர்மாவைத் தீர்க்க அந்த
பெற்றோர் துணை புரிய வாய்ப்பில்லை என்பதை உணரும்போது, சில விதிவச மாற்றங்கள் அந்த
குழந்தை பிறந்த குடும்பத்தில் ஏற்படுகிறது. அங்கே மின்னல் வேக திருப்பங்கள்
உருவாகிறது. பெற்றவர்கள் அந்த குழந்தையை தவிர்க்கிறார்கள்.
பின்பு எப்படியோ அது
தனக்கான (வாய்ப்பு) பெற்றோரிடம் வந்து சேர்ந்துவிடுகிறது. தத்தெடுப்பதன் மூலம் இது
மிக அபூர்வமாக, அற்புதமாக அரங்கேறுகிறது.
அதில் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் இது...!
சேலம் மாவட்டத்தில் ஒரு குக் கிராமம்:
குடிசை வீடு. அன்றாடம் உழைத்தால்தான் அடுப்பு எரியும் என்ற ஏழ்மை நிலை. அவர்களுக்கு
திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ளன. படிப்பறிவில்லாதவர்கள்.
தினமும் கணவனும்,
மனைவியும் மாட்டுத் தீவன தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்குச் செல்வார்கள்.
களைப்புடன் வீடு திரும்பி வந்து, இலவச தொலைக்காட்சியில் ஆட்டம் பாட்டம்
பார்ப்பார்கள். அவர்கள் இருவரும் செலவற்ற பொழுதுபோக்காகவும், அதிகபட்ச
மகிழ்ச்சிக்குரியதாகவும் கருதியது தாம்பத்ய சுகத்தை மட்டும்.
அடுத்தடுத்து இரண்டு
பெண் குழந்தைகள் பிறந்தன. பிரசவம் பார்த்த அரசு ஆஸ்பத்திரி நர்ஸ், ‘இரண்டு போதும்
குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறியதற்கு சரி... சரி...
என்று கூறி சில நாட்களை கழித்துவிட்டு, ஒருநாள் அதிகாலையில் குழந்தையை தூக்கிக்
கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவர்களாகவே வெளியேறி விட்டார்கள். காரணம் ஆண்
குழந்தை ஆசை.
இரண்டாவது பிரசவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, வீடு தேடிவந்த கிளி ஜோதிடர்
ஒருவர் ‘பிள்ளைத் தாய்ச்சியான இந்த பெரிய நாச்சியாருக்கு என்ன குழந்தை பிறக்கப்
போகுதுன்னு சொல்லு தாயே...’ என்று கிளியை திறந்துவிட்டு சீட்டு எடுக்கச் சொன்னார்.
வந்த சீட்டில் நின்று கொண்டிருந்தாள். பத்ரகாளி சூலாயுதத்துடன்!
சீட்டைப் பார்த்த கிளி ஜோதிடர், கையில் இருந்த பழங்காலப் புத்தகம் ஒன்றைப் பிரித்து
படித்துவிட்டு ‘அந்த பத்ரகாளியே வந்திருப்பதால், இப்போது உனக்கு பெண் குழந்தை
பிறக்கப் போகுது. ஆனால் அடுத்தது உனக்கு ஆண் குழந்தைதான்...’ என்று அடித்துச்
சொல்லி, ஐந்து ரூபாவை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
அவர் சொன்னதுபோல் இரண்டாவது பெண் குழந்தையே பிறந்ததால், அடுத்து அவர் சொன்னது போல்
மூன்றாவது ஆண்குழந்தை பிறந்துவிடும் என்று நம்பினார்கள். அதனால்தான் குடும்பக்
கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யாமல் ஆஸ்பத்திரியில் இருந்து நழுவிவிட்டார்கள்.
மீண்டும் அவள் மிக வேகமாக தாய்மையடைந்தாள். ஆண் குழந்தை ஆசையோடு பிரசவத்திற்குப்
போனாள். 23.03.2010 அன்று காலை அந்த நம்பிக்கை பொய்யாகிப் போனது. மீண்டும் அவளுக்கு
பெண் குழந்தைதான் பிறந்தது. என்ன செய்வது?
கணவன் ‘திரும்பத் திரும்ப பெண் குழந்தையையே பெத்துப் போடுறியே’ என்றான். ‘நீ
கொடுக்கிறதைத்தானே நான் வயிற்றுக்குள்ளே பத்து மாசமாக வைத்து வளர்த்துத் தருகிறேன்’
என்று, உண்மையை சொல்லத் தெரியாமல் மனைவி நொந்தாள். இறுதியில் அந்த குழந்தை
புறக்கணிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக நடக்கும் அதன் அதிசயமான இன்னொரு பக்கத்தைப் பார்ப்போம்,
திருச்சியில் உள்ள வசதியான ஒரு வீடு: கணவர் சேஷாத்ரி. மனைவி கனகா. (பெயர்கள்
மாற்றப்பட்டுள்ளன). இருவரும் உயர்ந்த பணிகளில் இருப்பவர்கள். திருமணமாகி
பத்தாண்டுகள் தாண்டிவிட்டன. திருமணமான புதிதில் உயர்படிப்பு, அதன் பின்பு வேலை
என்று இருந்ததால் தாய்மையை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போட்டார்கள்.
விரும்பிய நிலைக்கு சென்ற பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று விரும்பி
செயல்பட்டபோது தாய்மை வாய்க்கவில்லை. தள்ளிக் கொண்டே போனது. ஏன் என்று பரிசோதிக்க
மருத்துவமனைக்கு சென்ற போது கனகாவின் உடலில் சில குறைபாடுகள் இருந்ததாக
சொல்லப்பட்டது.
முதலில் அதை மருந்து மூலம் சரி செய்திடலாம் என்றார்கள். பின்பு சிறிய ஆபரேஷன்
என்றார்கள். அடுத்து நவீன கருத்தரிப்பு முறைகளைப் பரிந்துரைத்தார்கள்.
எலலாவற்றையும் பயன்படுத்தியாயிற்று. அவர்கள் உடலும், மனதும் வலித்ததுதான் மிச்சம்.
கருத்தரிப்பு எதுவும் நிகழவில்லை. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்கள்.
தினமும் டைரி எழுதும் பழக்கம் கொண்ட கனகா அன்றும் வருத்தத்தோடு டைரி எழுதினாள்.
எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டன. இனி வாடகைத் தாய் முறை மட்டுமே மாற்று
வழி என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால் இனி
குழந்தைக்காக நாங்கள் மருத்துவமனைக்கு செல்லப் போவதில்லை என்று முடிவு
செய்திருக்கிறோம் என்று எழுதி டைரியை மூடிவைத்தாள்.
கணவர் வேலைக்கு போய்விட்டார். கனகாவுக்கு அன்று வேலைக்குச் செல்லவும்
பிடிக்கவில்லை. காலை நேரம் என்றும் பார்க்காமல் அப்படியே கண் அயர்ந்து விட்டாள்.
நல்ல தூக்கம். கட்டிலின் ஓரத்தில் இருந்த அவளது வலது கையின் இரண்டு விரல்களை ஒரு
குழந்தை அப்படியே பற்றிப் பிடிக்க, அந்த தொடுதலை அனுபவித்த அவள், இன்ப
அதிர்ச்சியுடன் திடுக்கென விழித்தாள்.
கட்டிலுக்கு கீழே பார்த்தாள். காலி இடம். ‘எப்படி ஒரு குழந்தை என் கையை பற்றிப்
பிடித்தது? ஜில்லிடும் உணர்வு இப்போதும் என்னிடம் இருந்து கொண்டிருக்கிறதே, அது
எப்படி?’ என்றெல்லாம் வியந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்தாலும் அதன்
அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஆனாலும் சிலிர்ப்பை அனுபவித்த அந்த நாளை, அந்த
நேரத்தை தன் டைரியில் குறித்துக் கொண்டாள்.
மாலையில் வீடு திரும்பிய கணவர் ‘நண்பர் ஒருவரிடம் சொன்னேன். இனியும் ஆஸ்பத்திரிகளை
நம்ப வேண்டாம். ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவரே என்னை ஒரு
மையத்திற்கு அழைத்துச் சென்றார்.
தேவையைக் கூறி பெயரை பதிவு செய்து விட்டு
வந்திருக்கிறேன். குழந்தை கிடைத்ததும் நமக்கு தகவல் தெரிவிப்பார்கள்’ என்றார். ‘எது
நல்லதோ அது நடக்கட்டும்’ என்று கூறிய கனகா, தனது கையை குழந்தை ஒன்று பற்றிப்
பிடித்த அனுபவத்தைச் சொன்னாள். கனவாக இருக்கும் என்றார் கணவர்.
ஆனால், அன்றிலிருந்து அதே கை தினமும் அவளை பற்றிப்பிடிப்பதையும் நாளுக்கு நாள் அதன்
பிடிக்கும் தன்மை அதிகரித்துக் கொண்டிருப்பதையும் அவள் உணர்ந்தாள். அந்த குழந்தை
பிடிக்கும் போது உடல் ஜில்லிட்டு அவள் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவித்ததால், அந்த
உணர்வுக்காக தூக்கத்தை அதிகம் நேசிக்கத் தொடங்கினாள்.
தொடர்ச்சியான அடுத்த நிகழ்வு: குழந்தை தத்துக்கொடுக்கும் மையம்: சேஷாத்ரி பெயரைப்
பதிவு செய்து வைத்திருந்த மையத்தில், சேலம் கிராமத்தில் பெற்றோரால்
புறக்கணிக்கப்பட்ட அந்த பெண் குழந்தை சேர்க்கப்படுகிறது. மையத்தினர், குழந்தையை
சேஷாத்ரி தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக்கொடுக்க முன்வர, அந்தக் குழந்தையை மனதார
ஏற்றுக் கொண்டனர். கனகா குழந்தையை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டு வீடு வந்து
சேர்ந்தாள்.
கனகாவின் வீடு: குழந்தையை அருகில் படுக்க வைத்துக் கொண்டு கனகா தூங்க, இரவில்
முன்பு ஏற்பட்டதைப் போன்ற அதே உணர்வு. குழந்தை ஒன்று அவள் கையை பற்றிப் பிடித்தது.
அதே கை, அதே வருடல், அது போலவே பற்றிப்பிடித்தல். ஜில்லிட்ட நினைவோடு, அவள்
எதேச்சையாக அந்த கையை பிடிக்க முயற்சிக்க நிஜமாகவே அந்த பிஞ்சுக்கை அவள் கைக்குள்
அகப்பட்டுக் கொண்டது. கனவா, நிஜமா? அவள் கண்டுபிடிக்க முடியாமல் கண் விழிக்க,
அருகில் படுத்திருந்த புதிய குழந்தையின் பிஞ்சுக் கை அவள் கைக்குள்
சிக்கியிருந்தது. கனகாவைப் பார்த்து சிரித்தது.
அவள் சிலிர்த்துப் போனாள். ‘எனக்காகத்தான் நீ பிறந்திருக்கிறாய். எனக்கு பிரசவ
வலியைக் கூட தர விரும்பாத அன்புக் குழந்தை நீ என்பதைப் புரிந்து கொண்டேன். என்
குழந்தையான நீ, இன்னொரு தாய்க்குப் பிறந்து என்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக
என்னால் இயற்கையாகவும் தாய்மையடைய முடியவில்லை. செயற்கையாகவும் தாய்மையடைய
முடியவில்லை. எனக்கான நீ கடவுளின் குழந்தை...’ என்று உச்சி முகர்ந்தாள்.
பின்பு குழந்தை தன் கையைப் பிற்றிப் பிடித்த உணர்வு தனக்கு முதன் முதலில் என்றைக்கு
ஏற்பட்டது என்பதை அறிய டைரியை திறந்து பார்த்தாள். பற்றிப்பிடித்த அதே நாள் அதே
நேரத்தில்தான சேலத்தில் இந்த குழந்தை பிறந்ததாக அதன் பிறப்பு சான்றிதழில் பதிவு
செய்யப்பட்டிருந்தது.
‘உனக்காக நான் பிறந்து விட்டேன் அம்மா’ என்று தாயின் கையை
பிடித்து தன் பிறப்பை உணர்த்தியிருக்கிறது. கனகாவிடம் வந்து சேர்ந்த பின்பு
மீண்டும் பற்றிப் பிடித்து ‘நான்தான் அந்த குழந்தை’ என்பதையும் உணர்த்திவிட்டது.
ஆன்மாவின் இந்த ஆபூர்வ சக்தி வியப்பிற்குரியதுதான். அவரவருக்குரியது எப்படியாவது
அவரவர்களிடம் வந்து சேர்ந்து விடுகிறது. அந்த பெற்றோரிடமிருந்து தன் கர்மாவைத்
தீர்க்க வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி விடுகிறது.
மனித பிறப்பு மாண்புமிக்கது. பிறப்பெடுக்கும் இந்த உடல் மூலம் தான் அன்பு, கருணை,
சேவை அனைத்தையும் வெளிப்படுத்தி, அடுத்தவர்களுக்கு உதவுகிறோம். அப்படி இருக்க
‘பிறவாத வரம் வேண்டும்’ என்று சிலர் கடவுளிடம் கேட்டது கடவுளுக்கே பிடித்திருக்குமா
என்ன? அவர்களை கடவுளே சுயநலமிக்கவர்கள் என்றல்லவா கருதியிருப்பார். அதனால்
எல்லோருக்கும் நல்லது செய்ய மீண்டும் மீண்டும் பிறக்கும் வரம் தா...’ என்று மக்கள்
கேட்டால் என்ன?